Wednesday, April 8, 2009

தூரப்போ....

குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன் விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடைய வேண்டும் என எண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீக வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் என விசாரித்தான்.

"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார். அவர்கிட்ட போமந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்சா போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும் போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறிய அர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.

குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்து வந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும் வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம் குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...

அதை கண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " என ஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.

வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்து விட்டார் என நம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவு செய்து யாரும் தொந்திரவு செயாத வண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.

பல வருடங்கள் கடந்தது...

ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்து தொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்ட வண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்து கொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.

'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்து பாதையை மறைத்துக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான அந்த மரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."

பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.

தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனது வாழ்கையை அமைத்து கொண்டார்.

யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒரு முறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாக அவர்களின் கஷ்டம் விலகிவிடும்.

நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாக குணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.

வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனது சிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம் வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்த வேண்டும் என வேண்டினார்.

முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில் விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனே செய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.

தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில் உள்ள ரோகம் நீங்கியது.

பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா என சந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.

தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்த சுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்த பாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.

"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்து நன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்... இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.

பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...

"தூரப்போ"....

அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.

குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?

No comments:

Post a Comment