Tuesday, March 10, 2009

தியானத்தின் நன்மை

தியானம் என்பதை எல்லோரும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தியானம் என்று இவர் கேட்கிற கேள்வி சாமியை நினைப்பதைப் பற்றித் தான். தியானம் எல்லோருக்கும் இருக்கிறது. தியானம் இல்லையென்றால் நீ என்னைப் பார்ப்பதற்கு இங்கு வரவே முடியாது. அடிபட்டுச் செத்திருப்பீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்கள், எப்படிப் பயணப்படப் போகிறீர்கள், எப்போது சேருமிடத்தை அடையப் போகிறீர்கள், எப்போது எப்படி கிளம்புவது என்றெல்லாம் தெரியாமல் என்னை அடைந்திருக்க முடியாது. எனவே தியானம் என்பது உன்னி டத்தில் எப்போதும் இருக்கிறது. உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நீ தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறாய். ஒரு தோசை சாப்பிடுகிறாய். தோசையை எடுத்து, சட்னியில் வைத்து வாய்க்கு அருகில் கொண்டு போவதும்கூட தியானம்தான். ஒரு பரீட்சை எழுதப் போகிறாய், பேனாவை எடுத்து வைத்துக்கொண்டு கேள்வித் தாளைப் பார்க்கிறாய். என்ன நினைக்கிறாயோ அதை எழுதுகிறாய். அதுவும் தியானம்தான். ஒரு கால்பந்தை உதைக்கிறாய், அதுவும் தியானம்தான். தியானம் இல்லாத விஷயம் இந்த உலகத்தில் எதுவும் இல்லை.

இவர் கேட்கிற கேள்வி சாமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் எனக்கு தியானம் வரவில்லையே என்பதுதான். அதற்கு என்ன காரணம் என்று அவரே யோசனை செய்தால் தெரிந்துவிடும். கண்ணை மூடிக்கொண்டு சுவாமியைப் பற்றி நினைக்கிறார் என்று வைத்துக் கொள். இவனுக்கு என்னவெல்லாம் ஞாபகம் வருகிறதோ, அந்த எண்ணமெல்லாம் இவனுக்கு சுவாமியை விடவும் முக்கியமான விஷயம் என்று அர்த்தம். அவனுடைய மனத்தில் அந்த விஷயங்க ளெல்லாம் சுவாமியை விடவும் முக்கியமான இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அதனால் இவன் கொடுக்கும் முக்கியத்துவம் என்றைக்கு இறைவனுக்கு மாறுகிறதோ அன்றைக்கு இவனுக்கு தியானம் வந்துவிடும்.

ஒரு உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள். எனக்கு வேலை வெட்டியே கிடையாது. எனக்கு ஒரு குறையும் உலகத்தில் கிடையாது. நான் சுவாமியை நினைக்காமல் வேறு என்னதான் பண்ணிச் சாகணும் சொல்லு? எனக்கு சாமி ஞாபகம்தான் வரும். ஏனென்றால் எனக்கு வேறு எந்த எண்ணங்களுமே இல்லையே!

ஆனால் உனக்கு அப்படி இல்லையே! உனக்குப் பெண்டாட்டி, பிள்ளை, குட்டி இருக்கிறது. கொஞ்சம் துட்டு வேண்டும். நாளை காலையில் பாங்கிற்குப் போகவேண்டும். 1008 தொந்தரவு இருக்கிறது. அதனால் உன்னால் சாமியை நினைக்க முடியவில்லை. அதெல்லாம் எண்ணத்தால் தான் வருகிறது. என்னை மாதிரி எல்லாவற்றையும் விட்டுவிடு. அப்பொழுது ஜாலியாக இருப்பாய். எந்த எண்ணமும் வராது. இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே முருகர் உனக்கு தரிசனம் கொடுப்பார். அவரிடம் அரட்டை அடித்துக்கொண்டிருக்கலாம். நினைவுகள் அற்ற நிலை என்பது மற்ற நினைவுகளை அழித்த பின்னால் வரும். மற்ற நினைவுகள் இருக்கிற வரையிலும் அந்த எண்ணங்கள்தான் கடவுளுடைய எண்ணம் வரவிடாமல் தடுக்கும். அதனால் எப்போதாவது தான் கடவுளுடைய எண்ணம் வருகிறது, மற்ற எல்லா நேரங்களிலும் மற்ற எண்ணங்கள்தான் வருகிறது, இவ்வளவுதான் வித்தியாசம்.

- சிவசங்கர் பாபா

2 comments:

  1. wow super website but pls see Swamy Avathar Atmaguru because u have many matters from Atmaguru

    ReplyDelete